கண்கள் நமக்கும் உண்டு -- நமக்குக்
கருதும் வன்மை யுண்டு
மண்ணிடைத் தேசமெல்லாம் -- தினமும்
வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
எண்ண இயலாத -- புதுமை
எதிரில் காணுகின்றோம்
கண்ணிருந்தென்ன பயன்? நமக்குக்
காதிருந்தென்ன பயன்?
வானிடை ஏறுகின்றார் -- கடலை
வசப்படுத்துகின்றார்
ஈனப் பொருள்களிலே -- உள்ளுறை
இனிமை காணுகின்றார்
மேனிலை கொள்ளுகின்றார் -- நாமதை
வேடிக்கை பார்ப்பதல்லால்
ஊன்பதைத்தே அவைபோல் -- இயற்ற
உணர்ச்சி கொள்வதில்லை.
புழுதி, குப்பை, உமி -- இவற்றின்
புன்மைதனைக் களைந்தே
பழரசம் போலே -- அவற்றைப்
பயன்படுத்துகின்றார்!
எழுதவும் வேண்டாம் -- நம்நிலை
இயம்பவும் வேண்டா!
அழகிய பெண்கள் -- நமக்கோ
அழுகிய பழத்தோல்!
கைம்மை எனக்கூறி -- அப்பெரும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் -- இதய
நடுவிற் பாய்ச்சுகின்கிறோம்.
செம்மை நிலையறியோம் -- பெண்களின்
சிந்தையை வாட்டுகின்றோம்;
இம்மை இன்பம் வேண்டல் -- உயிரின்
இயற்கை என்றறியோம்.
கூண்டிற் கிளிவளர்ப்பார் -- இல்லத்தில்
குக்கல் வளர்த்திடுவார்,
வேண்டியது தருவார்; -- அவற்றின்
விருப்பத்தை அறிந்தே!
மாண்டவன் மாண்டபின்னர் -- அவனின்
மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை -- ஐயகோ,
அடிமைப் பெண்கதியே!