ஆற்றங் கரைதனிலே -- இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
காற்றில் உட்கார்ந்திருந்தேன் -- வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர் -- வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
சாற்றுச் சுவைமொழியார் -- சிலர்
தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர்; (ஆற்றங்கரைதனிலே)
நாட்டின் நிலைபேசிப் -- பல
நண்பர்கள் கூடி இருந்தனர் ஓர் புறம்
ஓட்டம் பயின்றிடுவார் -- நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
கோட்டைப் பவுன் உருக்கிச் செய்த
குத்துவிளக்கினைப் போன்ற குழந்தைகள்
ஆட்டநடை நடந்தே -- மண்ணை
அள்ளுவர் வீழுவர் அம்புலி வேண்டுவர்; (ஆற்றங்கரைதனிலே)
புனலும் நிலாவொளியும் -- அங்குப்
புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில்
இனிது பறந்து பறந் -- தங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள் !
தனிஒரு வெள்ளிக்கலம் -- சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நக்ஷத்திரம்!
புனையிருள் அந்திப் பெண்ணாள் -- ஒளி
போர்தத்துண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த (ஆற்றங்கரைதனிலே)
விந்தை உரைத்திடுவேன் -- அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்த ஓர் பாட்டுரைத்தாள் -- அது
முற்றும் தெலுங்கில் முடிந்து தொலைந்தது!
பிந்தி வடக்கினிலே -- மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்
எந்தவிதம் சகிப்பேன்? -- கண்ட
இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன; (ஆற்றங்கரைதனிலே)